இலங்கை சீன உறவை பலப்படுத்துதம் விதத்தில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் இரு நாள் உத்தியோக பூர்வ விஜயமாக 28.04.2021 இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகை ஆசிய நாடுகள் எங்கும் கொவிட் தொற்றின் பரம்பல் தீவிரமடைந்திருக்கின்ற வேளையிலும் இந்தியா பாரிய மனித அழிவை எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்துள்ளது. மரணித்த உடல்கள் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியாத துயரத்தை டெல்லி அனுபவித்துக் கொண்டிருக்கம் போது சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் இன் விஜயம் இலங்கையை நோக்கி நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் புவி சார் எல்;லைக்குள் முக்கியம் பெறும் நாடான இலங்கையுடன் சீன உறவு அதிக விமர்சனங்களோடு பார்க்கப்படுகின்றது. இக் கட்டுரையில் சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை வருகை ஏற்படுத்தவுள்ள விளைவுகளை தேடுவதாக உள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் தனது விஜயத்தின் பிரதான சந்திப்பாக இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரேடு உரையாடியுள்ளார். அத்தகைய உரையாடலில் இரு நாட்டுக்குமான அரசியல் பொருளாதார கலாசார விடயங்களே முதன்மைப்படுத்தப்பட்டதாகவும் இலங்கை ஜனாதிபதியுடனான உரையாடலில் சுமூகமானதாகவும் பயம் மிக்கதாகவும் அமைந்ததென சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் தெரிவித்துள்ளார். இதே போன்று பிரதமரை சந்தித்த போது உரையாடிய விடயம் தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த போது இரு நாட்டுக்குமான நட்பு உறவை பலப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சீன பாதுகாப்பு அமைச்சரின் முன்னிலையில் உரையாற்றுகின்ற போது கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு முதலீடுகளை ஊக்கவிக்கவும் அதற்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஆதரவை அதிகரிக்க சீன அரசிடம் எதிர்பார்ப்பதாகவும் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் இரு நாடுகளும் நெருக்கமாகப் பணியாற்ற இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஆறு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை சீனா வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு 27.04.2020இல் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரின் தலைமையில் இலங்கை பாகிஸ்தான் நேபாளம் வங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பொன்றை மேற்பொண்டிருந்தனர். கொவிட் தொற்றின் பின்னரான பொருளாதார நெருக்கடியை சரிசெய்யும் முகமாக சீன வெளிவிவகார அமைச்சர் தலைமையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. அவ் உரையாடலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கும் போது சீனாலிடமிருந்து மேலும் அதிக முதலீடுகளையும் முதலீட்டுத் திட்டங்களையும் இலங்கை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல்களை அவதானிக்கின்ற போது இலங்;கை சீன உறவு மேலும் பலமடைவதற்கான வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது என்பதை காட்டுகிறது. சீன பாதுகாப்பு அமைச்சரோடு அரசியல் பொருளார விடயங்களை விட இராணுவ விடயங்களே அதிகம் கலந்துரையாடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அத்தகைய கருத்துப் பகிர்;வுகள் எதுவும் பெரிதாக ஊடகங்களில் ஆதிக்கம் பெறவில்லை. கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியும் சீன காலனித்துவ வாதங்களும் எழுந்து இலங்கை ஒரு கொந்தளிப்பு நிலைக்குள் அகப்பட்டுள்ள போது சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகை நிகழ்ந்திருக்கின்றது. இதனையே சீனா உலக நாடுகளில் பின்பற்றி வருகிறது. நெருக்கடி எங்கு ஏற்படுகிறதோ அங்கு உடனடியாக தனது பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் மரபினை கொண்டிருகிறது. இத்தகைய வருகை தெளிவுபடுத்தும் செய்திகள் பல காணப்படுகின்றது.
ஒன்று கொழும்புத் துறைமுக நகரம் அதன் மீதான சீனாவின் செல்வாக்கு நிரந்தரமானது என்பதை சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் காட்டுகின்றது. இலங்கையும் சீனாவும் அரசியல் பொருளாதார கலாசார விடயங்களில் மாத்திரமன்றி இராணுவ விடயங்களிலும் அதிக பரிமாற்றம் உடைய நாடுகள் என்பதை கடந்த இரு தசாப்த காலமாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய பரிணாமம் கொழும்பு துறைமுக நகர நெருக்கடிக்குப் பின்பும் பலமானதாக அமையும் என்பதை மகா சங்கங்களுக்கும் எதிர் கட்சிகளுக்கும் மற்றும் பிராந்திய சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டு சீன இலங்கை உறவு இந்தியாவைக் கடந்து தனித்துவமானது என்பதையும் இராணுவ ரீதியான உத்திகளைக் கொண்டது என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. அதாவது சீன இலங்கை நட்புறவே இந்தியாவின் தலையீட்டைத் தவிர்பதற்கு இராணுவ ரீதியான எல்லைக்குள் இலங்கை சீன நட்புறவு நகரும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியா ரன்விஜய் கப்பலை கொழும்புத் துறைமுகத்திற்குள் (14.04.2021) நட்புறவின் அடிப்படையில் நகர்த்த சீனா ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குள் M.V. BBC Naples என்ற கப்பலை(20.04.2021) அணுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நகர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இரு கப்பல்களும் ஏதோ ஒரு அடிப்படையில் போர் முனைப்புக் கொண்டவை. அதனால் அதிக அரசியல் பெறுமானம் கொண்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று இந்தியாவிற்கு எதிரான பலமான கூட்டு ஒன்றை தென்னாசியாவில் ஏற்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது. தென்னாசிய நாடுகளுடனான சீன வெளிவவகார அமைச்சரின் உரையாடல் அதனையே காட்டுகின்றது. இந்தியாவை சூழ இருக்கும் அனைத்து நாடுகளும் இந்தியாவைத் தவிர சீனாவின் நட்பு நாடுகளாக மாறி இருப்பதோடு இந்தியா பின்பற்றிய தடுப்பூசி இராஜதந்திரத்தையும் சீனா முறியடித்தது (Vaccine Diplomacy) இந்தியா பாகிஸ்தான் தவிர்ந்த அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்கிய போதும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்ட போது பாகிஸ்தானைத் தவிர வேறு எந்தத் தென்னாசிய நாடும் இந்தியாவிற்கு உதவ முன்வராதது மட்டுமன்றி உதவ முடியாத நிலையிலும் காணப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தான் சில அறிவிப்புக்களை இந்தியாவிற்கு உதவப் போவதாக வெளிப்படுத்தியிருந்தது.
நான்கு பொருளாதார ரீதியில் கொவிட் -19இற்குப் பின்பான சூழல் உலகளாவிய ரீதியில் சீனாவிற்கே சாதகமானதாக உள்ளது. 2021இல் நடந்து முடிந்த மூன்று மாதங்களில் சீன பொருளாதார வளர்ச்சி 18.3மூ உயர்ந்துள்ளது. இதனால் சீனாவுடனான முதலீடு வர்த்தக நடவடிக்கைகள் உலகளாவிய ரீதியில் பிற பிராந்தியங்களைப் போன்று தென்னாசியப் பிராந்தியம் சீனாவுடன் முதலீட்டு உறவைப் பலப்படுத்த அதிகம் விரும்புகிறது. இத்தகைய உறவைப் பலப்படுத்தும் உத்தியோடு சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் விளங்கிக் கொள்ளப்படுதல் பொருத்தமானதாக அமையும்.
இத்தகைய பொறிமுறைக்கு ஊடாக சீன உறவை பலப்படுத்தும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அதிக விளைவை ஏற்படுத்தும் என்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் சீனா நோக்கிய இலங்கை உறவு 2005-2015 வரை ஆட்சி நிகழ்ந்த போது இதே போன்று நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும் சீன எதிர்ப்பு வாதத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு இலங்கை மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சீனாவுடன் மாத்திரம் மையப்படுத்தி உள்ளபோது இந்;தியாவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் அதிக முரண்பாட்டை கடைப்பிடிக்க ஆரம்பித்தன. அதனை ஜெனீவா விவகாரத்திலும் அதன் பின்பான கொழும்பு துறைமுன விவகாரத்திலும் எதிர்பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆனால் அத்தகைய போக்கு இலங்கைக்கு பாரிய சவாலானதாக அமையும். அத்தகைய சவால்களை ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவைக் கையாளவும் பொருளாதார நலன்களை அடையவும் சீனாவை மையப்படுத்திய போக்கு காணப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளினதும் இந்தியாவின் தலையீடும் அதிக சந்தர்ப்பத்தை வழங்குவதாக தெரிகிறது. சுதந்திரத்திலிருந்து இலங்கை மேற்கு நாடுகளை நிராகரிக்காத வெளியுறவை கடைப்பிடித்து வந்தது. அதனாலேயே இந்திய எதிர்ப்பு வாதத்தையும் மேற்கு ஏற்றுக் கொண்டதோடு இந்தியாவிற்கும் முன்னாள் சோவியத் யூனியனிற்குமான உறவை மேற்கு பகைப் புலமாகவே கருதியது. இதனால் இலங்கை இந்திய எதிர்ப்புவாதத்தையும் மேற்குடனான நெருக்கத்தையும் தனது வெளியுறவுக் கருவாகக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய இலங்கை மீதான தலையீட்டையும் நெருக்கடியையும் மேற்கு தமதாக்கிக் கொண்டதும் இந்தியாவை நெருக்கடிக்குத் தள்ளியதும் இலங்கையைப் பாதுகாக்கும் பொறிமுறையையும் மேற்கு கடைப்பிடித்து வந்தது. இதனால் இலங்கையின் வெளியுறவு ஆரோக்கியமானதாகவும் சுமூகமானதாகவும் அமைந்தது. ஆனால் தற்போது சீனா மீதான மேற்கு எதிர்ப்பு வாதமும் இந்திய எதிர்ப்பு வாதமும் இலங்கை மீதான எதிர்ப்புவாதமாக மாறியுள்ளது. இலங்கை சீன நட்புறவு இந்திய மேற்கு பகைப்புலத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்தியாவின் புவிசார் அரசியலுக்குள்ளும் இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தின் மையப் பகுதியிலும் இலங்கை காணப்படுவதனால் அதன் மீதான மேற்கினதும் இந்தியாவினதும் பார்வை தனித்துவமானதாகும்.
எனவே சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் சீனா நோக்கிய இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் வளர்ச்சி நிலையை காட்டுகிறது. இது இலங்கையின் ஆட்சி முறைமைக்கும் கட்டமைப்புக்கும் இராஜதந்திர ரீதியான பெறுமானதை கொடுக்கத் தவறுவதோடு எதிர்கால நெருக்கடிக்கு வழிவகுக்கும். ஆனால் கொவிட் 19இன் தாக்குதல் சீன பொருளாதாரத்தின் செழிப்பு மேற்கினதும் இந்தியாவினதும் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆதிக்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குமாயின் சீன இலங்கை உறவின் தனித்துவம் இலங்கையின் ஆட்சித் துறையின் அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தக்கவைப்பதாக அமையும். இந்தியா இலங்கையை கையாளும் தன்மையை அவதானிக்கும் போது பின்பற்றும் பலவீனங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: